Sunday 3 February 2013

இரட்சிப்பிற்குப் பின்

தற்போது நடைபெற்ற ஓர்கூட்டத்தில் நான் என் பாவங்களை அறிக்கையிட்டு இரட்சிக்கப்பட்டேன், இரட்சிக்கப்பட்ட அந்த வேளையிலேயே ஆவியின் நிறைவையும் பெற்றேன். தொடர்ந்து என்ன செய்வது, எப்படி வாழவேண்டும்?
 
பாவங்களை அறிக்கையிட்டு, இரட்சிக்கப்பட்ட நீ இனி இயேசுவின் பிள்ளை, கிறிஸ்தவன் என்ற பெயரைக்காட்டிலும், இயேசுவின் நாமம் உன்மேல் தரிக்கப்பட்டிருப்பதை பிரதானமாய் உணர்ந்துகொள். எங்கு சென்றாலும் இயேசுவை பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழ்வது முக்கியமானது. உனது ஒரு கேள்விக்காக பல பதில்களை முன் வைக்கிறேன்.
 
உன்னைக் காத்துக்கொள்
 
முதலாவது, இரட்சிப்பு என்பது தேவனால் கிடைக்கும் ஈவு, நாம் உழைத்து சம்பாதித்ததல்ல (எபேசியர் 2:8). உனது பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை நினைவு கூர்ந்து, பாவங்களை அறிக்கையிட்டு, இனி அதனைச் செய்யாதிருப்பேன் என்ற தீர்மானத்துடன் எனது பாவங்கள் அவரால் மன்னிக்கப்பட்டுவிட்டது என விசுவாசிக்கும்போது உனது வாழ்வில் ஓடத் தொடங்கும் சுவாசமே இரட்சிப்பு.

இரட்சிக்கப்பட்ட நீ இனி பாவம் செய்ய முடியாது என்ற எண்ணத்தோடிருப்பதைக் காட்டிலும், இரட்சிக்கப்பட்ட நீ இனி பாவம் செய்யக்கூடாது என்பதுதான் பிரதானமானது. விபச்சாரத்தில் கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட ஸ்திரீ பிடிக்கப்பட்டு இயேசுவினிடத்தில் கொண்டுவரப்பட்டபோது, மரணம் அவளது பக்கத்தில் நின்றாலும், இயேசுவின் மன்னிப்பினால் மறுவாழ்வு அவளின் பக்கமாயிற்று. எனினும், 'நீ போ இனி பாவஞ் செய்யாதே' (யோவான் 8:11) என்ற வார்த்தையோடேயே இயேசு அவளை வழியனுப்புகிறார். மீண்டும் அவளால் விபச்சாரம் செய்ய முடியும், ஆனாலும் என்னிடத்தில் மன்னிப்பைப் பெற்ற நீ, மறு வாழ்வைப் பெற்ற நீ இனி விபச்சாரம் செய்யக்கூடாது என்பதுதான் இயேசு அவளுக்கு அளித்த பதில்.

சகோதரனே உனக்கும் இதே பதிலைத்தான் எழுதுகின்றேன். இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன் நீ எப்படியிருந்தாயோ நான் அறியேன், அறிந்தவர் அவர் ஒருவரே. ஆனால், இயேசுவை ஏற்றுக்கொண்டேன், பாவங்களை அறிக்கையிட்டுவிட்டேன் என்று எனக்கு நீ எழுதியிருப்பதால், 'நீ இனி பாவம் செய்யக் கூடாது' பாவம் செய்யாதபடி உன்னை நீயே காத்துக்கொள்ளவேண்டும். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம், தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (யோவான் 5:18). தேவனால் பிறந்தவனை தேவன் காக்கின்றான் என்றபோதிலும், உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் காக்கும் பொறுப்பு உனக்கும் உண்டு. உன்னை நீயே பாவத்திற்கு விலக்கிக் காத்துக்கொள்ளும்போது, பொல்லாங்கனால் உன்னைத் தொட முடியாது. நீ வழி விலகிச் செல்லும்போது மாத்திரமே அவனின் வலையில் விழுவாய்.

உன்னிலே நீ வித்தியாசத்தை உணருகிறதுபோலு, உலகமும் உன்னைச் சார்ந்தோரும் உன்னிலே உண்டாகியிருக்கும் இந்த வித்தியாசத்தை உணரட்டும். இரட்சிக்கப்பட்ட பின்னர் வெளியிலே இரட்சிக்கப்படாதவனைப்போல வாழவேண்டாம். நான் இனி தவறான காரியங்களைச் செய்வதில்லை என தாராளமாகச் சொல்லத் தைரியம் வேண்டும். வெளியிலே சாட்சியான ஓர் வாழ்க்கை வாழ்வது உன்னைக் காக்கும்.

இரட்சிக்கப்பட்டுவிட்டால் பரலோகத்திற்குச் சென்றுவிடுவோம், பரிசுத்தமான தேவனோடு வாசம் செய்வோம் என்பது உண்மைதான். ஆனால், அந்த இரட்சிப்பை அசட்சை செய்து, மீண்டும் பாவம் செய்து, பின் வாங்கிப்போனால் பாதாளம்தான் நரகம்தான். இரட்சிப்பு என்பது ஆவிக்குரிய பயணத்தின் ஆரம்பமே, தொடர்ந்து சிறப்பாய் அவருக்குப் பிரியமாய் வாழ்ந்து முடித்தால் மட்டுமே அந்த இரட்சிப்பின் பூரணமான பரலோகத்திற்குள் நுழையமுடியும். பாவத்தில் விழுந்து நியாயத்தீர்ப்பில் நிற்கும்போது என்றோ இரட்சிக்கப்பட்டதை அன்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அது கணக்கில் கொள்ளப்படாது. ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும் அதன் முடிவுதான் முக்கியம் முக்கியம் முக்கியம்.

நண்பர்கள்

உலகத்தோடு ஒட்டி வாழ்ந்த நாட்களில், பல நண்பர்கள், பல கேளிக்கைக் காரியங்கள், பல நேரப் போக்கு காரியங்கள் உனது அன்றாட மணித்துளிகளை சமன் செய்திருக்கலாம். ஒருவேளை இன்னும் தவறான பல பழக்கவழக்கங்களிலேயே இருக்கும் நண்பர்களின் பழகும் நேரமும், தன்மையும் அற்றுப்போகலாம். மற்றவர்கள் சினிமா செல்லும்போது, நீ தனியாக இருக்கவேண்டிய நிலை உண்டாகலாம், மற்றவர்கள் குடிக்கச் செல்லும்போது, இயேசுவின் பிள்ளை நீ தனிமைப்படுத்தப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உண்டாகும்போது, ஏதோ எதையோ இழந்துவிட்டதைப்போன்ற உணர்வு உள்ளத்தில் உண்டாகிவிடுவது சகஜம். ஆனால், அவைகளை அவர்களைக் கொண்டு சமன் செய்ய முடியாத பட்சத்தில் தனிமை என்ற உணர்வின் ஆதிக்கம் வாழ்க்கையில் சோர்பைக் கொண்டுவந்து, உன்னை சொந்தம் பாராட்டிவிடும். சில வேளைகளில், ஏன் இரட்சிக்கப்பட்டோம்? என்ற கேள்வி கூட உண்டாகலாம் உள்ளத்தில். இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் இப்படி நான் மற்ற நண்பர்களோடு பழக இயலவில்லையே என்ற எண்ணம் ஆழ்மனதை இறுக்கிப்பிடித்துவிட்டால், இரட்சிப்பின் வேர் தளர்ந்துபோய்விட வாய்ப்பு உண்டு.

பழைய நண்பர்களோடு பேசுவதும், பழகுவதும் தவறல்ல, ஆனால், அவர்களுடைய பாவத்தின் பங்கேற்பது தவறு. பாவியான ஒரு மனிதனிடத்தில் பேசவே கூடாது என்றால், எந்த ஊழியரும் பாவிகளாயிருக்கின்றவர்களுக்குப் பிரசங்கம் செய்ய முடியாது. எனவே, பேசுவது தவறல்ல. ஆனால், அப்படி பேசும் வேளையில் உன்னுடைய பெலன் எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்வது நல்லது. யார் யாரை இழுக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது நல்லது. உதாரணமாக, சினிமாவுக்குச் சென்றுகொண்டிருக்கும் வாலிபன் ஒருவன் உன்னைச் சந்திக்கிறான், சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் உன்னையும் சினிமாவுக்கு அழைக்கிறான், நீயோ 'நான் சினிமா பார்க்கமாட்டேன்' என்கிறாய். அவனோ, 'இது ஒன்னும் தப்பான சினிமா இல்ல, குடும்பத்தோட எல்லாரும் பார்க்கிற படம் தான்' என்கிறான். உனது மனதின் பெலன் சற்று தளர்ந்து, அப்படியா அவனுடன் போவோமா, 'அதுதான் தப்பான படம் இல்லை என்று அவன் சொல்லிவிட்டானே' என அவன் பக்கம் நீ இழுக்கப்பட்டு அவனுடன் சென்றுவிட்டால், இறுதியில் சினிமாவினால் ஈர்க்கப்பட்டு, ஆவிக்குரிய சிறகினை இழந்து சினிமாவின் சிறைக்குள் கிடப்பாய்.

நண்பர்களோடு பழகும்போது, அவர்கள் ஏதாவது விரோதமான காரியங்களை உனக்கு முன் வைக்கும்போது, நீ இரட்சிக்கப்பட்டவன், இயேசுவைப் பின்பற்றுகிறவன். வேதத்தின் வசனத்தில் நடக்கிறவன் என்பதைச் சொல்வதில் தவறில்லை. இப்படிச் சொல்வதில் கூச்சம் வேண்டாம், வெக்கம் வேண்டாம். அப்படி தொடர்ந்து சொல்லும் பட்சத்தில், நண்பர்களின் மனதில் நீ இப்படிப்பட்டவன், இயேசுவின் பிள்ளை என்கிற நற்செய்தி பதிவாகிவிடும்.

எவரோடும் பேசும் வேளையில், உனது பெலத்தை புரிந்துகொள். உனது விசுவாசத்தை தளரச் செய்யும் கரியங்களோ, உனது இரட்சிப்பின் அஸ்திபாரத்தை அதிரச் செய்யும் காரியங்களோ அவனால் உண்டாகுமென்றால் அங்கிருந்தும், அவனிடமிருந்தும் அகன்றுவிடு, இல்லையேல் அவனுடனான உறவு உனது ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொன்றுவிடும். நீ பெலனடைந்து, திடனடைந்து அவனைச் சந்திக்க தைரியமடைந்து பின்னர் சென்று அவனைச் சந்தித்து உன் பக்கம் இழுப்பதிலும், ஈர்ப்பதிலும் தவறில்லை.

குழுவோடு இணைந்துகொள்

நண்பர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய விதங்களைக் குறித்து உனக்கு எழுதியிருந்தேன். எனினும், பாவத்தில் கிடந்த நண்பர்களோடு பழைபடி ஐக்கியம் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்ததுபோல இனி நீ வாழ முடியாது என்பது திண்ணம். இது ஓர் வெற்றிடத்தை உன்னில் உண்டாக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.

இதனை ஈடு செய்யவும் நீ கற்றுக்கொள்ளவேண்டும். புதிய ஆவிக்குரிய நண்பர்கள், குழுக்கள், ஊழியங்கள், சபைகளுடன் நீ உன்னை  இணைத்துக்கொள்ளவேண்டும். இது உனது நண்பர்களின் வட்டத்தைப் பெருக்கும், தனிமையைச் சுருக்கும். உனது ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் உதவியாயிருக்கும். தனியாய் ஓடி தடுக்கி விழுந்தால், தூக்கிவிடுவதற்கு யாருமிருக்கமாட்டார்களே. எனவே, ஆவிக்குரிய நண்பர்கள், ஐக்கியத்துடனான உடன்பாடுகள் நிச்சயம் தேவை. அவர்களோடு இணைந்துகொள்ளும் பட்சத்தில் உனது ஆவிக்குரிய வாழ்வின் தாலந்துகளை உபயோகிக்கவும் சமயம் கிடைக்கும்.

ஆவியின் நிறைவு, அபிஷேகம்

நாம் இரட்சிக்கப்படும்போது, 'நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்' (ரோமர் 8:16). இது இரட்சிக்கப்படும்போது நிகழும் நிகழ்வு. தேவனை விட்டு தூரமாய் சென்றுகொண்டிருந்த நமது மாம்சீக ஆவி, மனந்திரும்பி தேவனுடைய ஆவியுடனே கூட இணைந்துகொள்வதுதான் இரட்சிப்ப்பு. இருமுனை ஈர்ப்பு ஏற்பட்டு ஒரே முனையில் தேவ ஆவியானவர் நடத்தும் பாதையில் அடியெடுத்துவைக்கத் தொடங்குவோம். நம்முடைய ஆவி, பயப்படும் ஆவியாக இராமல், அப்பா பிதாவே என்று கூப்பிடுகின்ற புத்திர சுவிகாரத்தின் ஆவியாக மாறிவிடுகிறது (ரோமர் 8:15).

பரிசுத்த ஆவியானவரால், நாம் அவருடைய பிள்ளை என முத்திரை போடப்படுகிறோம்.நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபே 1:13) இப்படியாய் நம்மை ஆவியானவர் முத்திரையிட்டாலும், அவர் நம்முடைய ஆவியோடே கூட இணைந்து நமக்குள்ளேயே வாசம் செய்கிறார். எனவே இயேசு, உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான் 14:17) என்று சொன்னார்.

இரட்சிப்பின் அனுபவத்தின்போது, நம்முடைய ஆவி தேவனுடைய ஆவியினால் முத்திரிக்கப்பட்டு, பெலமாக தேவ ஆவியுடன் இணைக்கப்படுகிறது. எனவே இயேசு, என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவா 14:26) என்று சொன்னார்.

இப்படி உன்i முத்திரித்த, உன்னுடைய ஆவியோடு கூட இணைந்த ஆவியானவரை நீ வரும் நாட்களில் உனது வாழ்க்கையில் துக்கப்படுத்திவிடக்கூடாது. எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல், அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'(எபே 4:30) என எச்சரிக்கிறார்.

இரட்சிக்கப்ட்ட நாளுக்கு முன்னாக நீ மட்டும் உனது ஆவியுடன், மாம்சத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால், இரட்சிக்கப்பட்ட பின்னர், 'கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும், பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார், நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்' (கலா 2:20) என்று பவுல் தன்னைக் குறித்து எழுதிய வசனம் உனக்கும் பொருந்தும்.

இத்தனையாய் தேவ ஆவியானவருடன் நீ இணைந்துகொள்வது, உன்னை சத்தியத்தில் நடத்தினாலும். உலகத்திற்கு உன்னைக் கொண்டு அவர் செய்ய நிர்ணயித்த காரியங்ளைச் செய்து முடிப்பதற்கான அபிஷேகத்தினையும் அவர் கொடுக்கின்றார். நம்முடைய ஆவி அவருடைய ஆவியுடனே கூட இணைந்துகொண்டாலும், நீ அதினால் நடத்தப்பட்டாலும் போதிக்கப்பட்டாலும், ஆவியானவர் விரும்பும் தன்னுடைய திசைக்கும் உன்னைத் திருப்புவார். தேவ ஆவியானவருக்கும் உனக்கும் உள்ள உறவு அதாவது இரட்சிப்பு மட்டும் போதும் என்று இருந்துவிடமுடியாது. தேவன் தான் தெரிந்தெடுக்கும் ஒவ்வொருவரையும், விசேஷித்ததோர் தம்பணியினை நிறைவேற்ற குறித்திருக்கிறார். இரட்சிக்கபட்டோம் என்று நீ இருந்துவிடாமல், உன்னை அவர் தன் பின்னே நடத்திச் சென்று, உன்மேலுள்ள தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்படுவது அபிஷேகம்.

அந்நியபாஷை ஓர் அபிஷேகத்தின் அடையாளமாயிருந்தாலும், அது மட்டுமே அபிஷேகத்தின் அடையாளம் என்று வேதம் வர்ணிக்கவில்லை. அப்போஸ்தலர்களின் நாட்களில் அவர்கள் மேல ஆவியானவர் வந்தபோது, அவர்கள் பல்வேறு வேறு பாஷைகளை பேசினார்கள். அந்நிய பாஷையும் ஆவியானவரின் அபிஷேகத்தின் ஓர் அடையாளம்.

இரட்சிக்கப்பட்ட நீ ஜெபிக்கும்போது, வேதம் வாசிக்கும்போது, ஆண்டவரே நீர் என்னைக் கொண்டு என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? என வினவும்போது. உன்மேலான அவருடைய திட்டத்தை அவர் உனக்கு வெளிப்படுத்துவார். அந்த திட்டத்தினை நிறைவேற்றி முடிக்க ஆவியானவர் உன்னை அபிஷேகிப்பார். உனக்கு முன்னே சென்று உன்னை நடத்துவார். இரட்சிக்கப்பட்ட உன்னைக் கொண்டு உலகில் ஏதோ ஒரு திட்டம் நிறைவேறப்போகிறது என்பதை மீண்டும் உன்மேல் வந்தமர்ந்து உனக்கு உணர்த்துவதே அபிஷேகத்தின் ஆரம்பம்.

இந்த அபிஷேகத்தினையும் நீ உணர்ந்து, பெற்றுவிட்டாய் என்றபடியினால், மேற்கொண்டும் சில ஆலோசனைகளையும் வழங்க விரும்புகிறேன்.
அபிஷேகம் என்பது ஓர் கேஸ் சிலிண்டர் போன்றது ஒரே நேரத்தில் அப்படியே வெடித்து எரிந்து முடிந்துவிடம் பண்டிகை கால வெடி அல்ல. எதற்காக உன்னைத் தெரிந்துகொண்டாரோ, அதற்கானவைகளை அவர் உனக்குள்ளே அடைத்துவைத்து, மெல்ல மெல்ல உலகிற்கு வெளிக்காட்டுவார். தீயாக, வெளிச்சமாக எரியச் செய்வார்.

அபிஷேகத்தை நீ பெற்றிருந்தால், ஆவியானவரின் திசைக்கு நேராகத் திரும்பி நில். ஜெபத்தில் அந்த பாதை உனது கண்ணில் தெரியும். அதற்கான பெலமும் உனக்குக் கிடைக்கும், பெருகும். போதிக்கவோ, பாடவோ, ஆராதனை நடத்தவோ, மேய்ப்பனாகவோ, ஊழியனாகவோ அல்லது வேலை செய்துகொண்டே தேவ பணியினைச் செய்யும் மனிதனாகவோ உனது அழைப்பு உன் கண்ணில் தென்படலாம். தேவ அழைப்பு உன்னிடத்தில் நிறைவேற, அவரோடுடனான உனது உழைப்பும் இன்றியமையாதது. நீ எதுவுமே செய்யாமல், உன் மேல் வைத்திருக்கிற திட்டத்தை தேவனாக நிறைவேற்றிவிட்டு அதற்கு உன் பெயரைக் கொடுத்துவிடமாட்டார். தேவனோடு நடப்பதும், தேவனோடு உழைப்பதுமே உன்னை அந்த இலக்கினை அடையச் செய்யும்.

இரட்சிக்கப்படும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். நமது உள்ளத்தின் ஆவி அவருடைய ஆவியுடன் இணைக்கப்படுகின்றது. ஆனால், அவருக்காக நீ செயல்படும்படியாக ஆவியானவர் உன்னை மேலும் அபிஷேகித்து, பிரத்தியேகப்படுத்தும் நிலையின் நிகழ்வையும் தெளிவாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆவியானவரின் அபிஷேகம் நம்மேல் இறங்கும்போது, சரீரத்தை ஆட்கொள்ளும்போது, அந்நிய பாஷை உடன் சில அதிர்வுகளுக்கும் உள்ளாவது இயல்பு. ஓர் உதாரணம், ஐஸ்கட்டி ஒன்றினை ஒருவருடைய கையிலோ  முதுகிலோ அவர் அறியாத நேரத்தில் வைக்கும்போது, உஸ்ஸ் என்ற அதிர்வின் சர்த்தம் தடுக்க இயலாதது. அப்படியே அக்கினி ஒருவரைத் தொடும்போதும். இதுபோலவே, பெலவீனமான இதுவரை பாவத்திற்குட்பட்டிருந்த, அல்லது புதிதாக இரட்சிக்கப்பட்டிருந்த சரீரத்தினை பெலமான பரிசுத்த ஆவியானவர் தொடும்போது, அபிஷேகிக்கும்போது நடைபெறுகிறது. இந்தக் காரியத்தினால், ஒரு சிலர் குதிக்கலாம், கைதட்டலாம். ஆனால், இந்த ஆவியானவானின் அபிஷேகம் வெறும் துள்ளுவதற்கும், குதிப்பதற்கும் மாத்திரம் கொடுக்கப்படுவதல்ல, துள்ளுவதும், குதிப்பதும் மாத்திரம் ஆவியானவரின் அபிஷேகம் என்றும் அர்த்தமல்ல. ஒருவேளை அவைகள் நடந்தாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரத்தொடங்கும்போது, அபிஷேகத்தைத் உள்வாங்கிக்கொண்டு அது எதற்காகக் கொடுக்கப்ட்டதோ, அந்த நோக்கத்தினை நிறைவேற்றத் தொடங்குகிறார் அவர்.

மேலும் ஓர் உதாரணம். மின்சாரத்தை மனதன் தொடும்போது, சாக் அடிப்பதினால் துள்ளுவது இயல்புதான், எனினும் அதே மின்சாரத்தை ஒரு மின் விளக்கினுள் செலுத்தும்போது அது மற்றவர்களுக்கு பயன்கொடுக்கும்படியாக பிரகாசிக்கத் தொடங்குகிறது, ஒளிகொடுக்கத் தொடங்கிவிடுகிறது. அப்படியே அபிஷேகம் பெற்ற மனிதனும், மின்விளக்காக தன்னை மாற்றிக்கொண்டால், அவனுள் நுழையும் அபிஷேகம் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக மாறிவிடும். அபிஷேகம் பெற்றதை ஆண்டவரிடமே காட்டிக்கொண்டிருந்து, மற்றவர்களுக்கு எந்த பிரயோஜனமாக வாழாதிருப்பது, எரிந்துகொண்டிருக்கிற விளக்கினை நோக்கி டார்ச் அடித்துக்கொண்டிருப்பதற்கு சமானமானது. நமது ஒளி இருளில் பிரகாசிக்கவேண்டும், இதற்கானதே அபிஷேகம்.

பிரசங்கிப்பதற்காக ஒருவேளை அவர் உன்னை அபிஷேகித்திருந்தால், நீ பிரசங்கம் செய்யும் காரியம் நிறைவேறத்தொhடங்கும் அப்படியே மற்ற அவரது நோக்கங்களும் நிறைவேறத் தொடங்கும். அந்த நோக்கங்கள் நிறைவேறும் போது, நீ துள்ளுவதற்கும், குதிப்பதற்கும் பதிலாக பிரசங்கித்துக்கொண்டிருப்பாய், அவர் அழைத்த அழைப்பினை நிறைவேற்றிக்கொண்டிருப்பாய். மேலும் ஓர் உதாரணம். பிரசங்கிப்பதற்காக தேவ அபிஷேகம் பெற்றவர்கள் பிரசங்கிப்பதற்குப் பதிலாக பிரசங்க பீடத்தில் குதித்துக்கொண்டிருந்தால் பயனிராதே. எனவே அபிஷேகம் பெற்றிருந்தால், அது என்ன நோக்கத்திறாக உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, அதனை நிறைவேற்ற உன்னை ஆயத்தப்படுத்துவது அவசியமானது. அதிலேயே உன் மேலுள்ள தேவ திட்டம் நிறைவேறும். 

வேகமும், விபத்தும்

இரட்சிப்பு எல்லாருக்கும் பொதுவானது, அழைப்பு வௌ;வேறானது. இரட்சிக்கப்பட்ட பின்னர் இதற்காத்தான் நீ அழைக்கப்பட்டிருக்கிறாய் என்ற தௌவு உண்டாகிவிட்டால், அதற்காக உன்னை அர்ப்பணித்துக்கொள். அதற்கான ஆரம்ப வேலைகளைச் செய், அஸ்திபாரமிடு, அன்றாடனம் ஓடு, அவருக்காக செயல்படு. என்றாலும் எல்லாம் ஒருவேளை நீ எதிர்பார்க்கும் வேகத்தில் நடைபெறாது போகலாம், கவலை வேண்டாம். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர், சோர்வு வேண்டாம்.

அபிஷேகத்தினைப் பெற்று அழைப்பை நோக்கி ஓடும்போது, தேவனது பார்வையில் வேகம் தேவையே, ஆனாலும் விவேகமும் அவர் விரும்புகிற வண்ணம் நமக்குத் தேவை. ஒரு சிறிய உதாரணம்.

ஒரு புதிய பைக் ஒன்றினை நீ வாங்கியிருக்கிறாய் என வைத்துக்கொள், அது சுமார் 160 கி.மீ வேகம் வரை செல்லும் சக்தி கொண்டது. அதற்காக அதனை பட்டணத்திற்குள் 160 கி.மீ வேகத்தில் ஓட்டிச் செல்ல முடியாது. கானாவூர் திருமணத்தில், திராட்சை ரசம் குறைவு பட்டபோது, 'என் வேளை இன்னும் வரவில்லை' என தனக்குக் குறிக்கப்பட்ட வேளைக்குக் காத்திருந்தார் இயேசு. எனவே நீயும் காத்திரு, தண்ணீர் ரசமாகும், அற்புதங்கள் நடக்கும்.

மேலும் ஓர் கோணத்தில் வேகத்தை உனக்கு விளக்க விரும்புகிறேன். 160 கி.மீ வேகத்தில் செல்வதற்கு உன்னை ஒருவன் தூண்டிவிட்டு, எதிரே அவனே ஒரு கல்லையோ, வேறொரு காரியத்தையோ வைத்துவிட்டால் விபத்து நடந்துவிடுமே. விவேகமில்லாத வேகத்தினால், எத்தனயோ ஆண்டுகள் வாழ்ந்து கர்த்தருக்காகவும் அவர் உனக்காகவும் வைத்திக்கிற தி;ட்டம் நிறைவேறாமல் அன்றே அந்த விபத்தோடு முடிந்துவிடுமே. இன்றைய நாட்களில் வாலிபர்கள் பைக்கில் சென்று விபத்துக்குள்ளாகி மரித்துவிடும்போது பெற்றோருடைய மனநிலை என்னவாயிருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் இது புரிவது எளிது.

தேவன் உன்னை நடத்துகின்ற வேகத்தை நான் கட்டுப்படுத்துகிறேன் என்ற நோக்கத்தில் நான் எழுதவில்லை, அந்த வேத்தை சத்துரு அதாவது பிசாசு கையில் எடுத்து உன்னை மோதவிட்டுவிடக்கூடாது என்றுதான் எழுதுகின்றேன்.

இயேசு தேவனுடைய குமாரன், பாமமில்லாதவர், உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்ப்பதற்க உன்னதத்திலிருந்து வந்தவர். அந்த இயேசுவையும் பிசாசானவன், உயர்ந்த மலையின் மேலும், தேவாலயத்தின் உப்பரிக்கையின் மேலும், வனாந்தரத்திலும் கொண்டுபோய் அவருக்கு நீர் தேவனுடைய குமாரன் தேவனுடைய குமாரன் என்று சொல்லிச் சொல்லி அவரது வேகத்தைத் தூண்டிவிட்டு அவரை மோதவிட நினைத்தான். வேத வசனத்திலிருந்து எடுத்து எடுத்து பேசி வேகத்தை அதிகரிக்கச் செய்தான். ஆனால், இயேசுவோ பிசாசின் நோக்கத்தை அடையாளம் கண்டுகொண்டார், தனது வேகத்திலேயே பிரயாணித்தார்.

இயேசுவின் வேகம் அவர் பிதாவுடன் நிர்ணயித்திருந்தது, லாசரு மரித்துவிட்டபோதிலும் அவருடைய வேகம் அதிகரித்துவிடவில்லை தன்னுடைய வேகத்திலேயே அவர்  சென்றுகொண்டிருந்தார்.

எனவே, ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கும் நீ உனது வேகத்தைக் குறித்தும் கவனமாயிரு. தேவ சித்தத்தை அறிந்து, தேவ நோக்கத்தைப் புரிந்து, தேவனுக்கு ஏற்ற காலத்தினைத் தெரிந்துகொண்டு செயலில் இறங்கு. தேவ மனிதன் போகும் பாதையினைப் பிசாசு தடுக்க முடியாது, என்றாலும், தேவ மனிதனை அறியாத, கவனியாத, பொருட்படுத்தாத வேளையில் தூண்டிவிட்டு தன்னைத் தானே அழித்துக்கொள்ளச் செய்யும் தந்திரத்தை உடையவன் பிசாசு. கர்த்தருடைய ஜனத்தை சபிப்பதற்கு பிலேயாம் தீர்க்கதரிசியினால் கூடாது போயிற்று, ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கெ hள்ளும் ஆலோசனையினை அவர் கொடுக்கும்படியாயிற்று, அவன் கொடுத்த ஆலோசனை நிறைவேறியும்போனது.

இயேசுவை குதிக்கச் சொன்னதுபோல, நம்மை நாமே அழித்துக்கொள்ளச் செய்யும் பிசாசின் சவால்களையும், ஆலோசனைகளையும் நீ அறிந்துகொள்.
 
 

Friday 1 February 2013

வேத வாசிப்பிற்கான உங்கள் அறிவுரைகள் என்ன?

 
 
நான் வேதம் வாசிக்கிறேன், ஆனால் அதனை முறைப்படி எப்படி வாசிப்பது, புரிந்துகொள்வது?

உனக்கு பதில் எழுதுவதாக எண்ணி, உலகத்தில் இக்கேள்வியோடு உள்ள அனைவருக்கும் இக்கடிதத்தை எழுதுகின்றேன். மகிமை தேவன் ஒருவருக்கே.

பாடப் புத்தகம் மற்றும் முதல் பாடம்

வேதம் என்பது நமது கையில் கொடுக்கப்பட்ட இறைவனின் பாடப்புத்தகம். தேவன் மனிதனைப் படைத்த நாட்களில் தேவனே அவனுக்கு எல்லாமாயிருந்தார், மனிதன் பாதை மாறியபோது நியாயப் பிரமாணங்களைக் கொடுத்து, மனிதனுக்கு பாதையைக் காட்டிக்கொடுத்தார். தேவன் கொடுத்த நியாப்பிரமாணங்கள் கட்டளைகளாகவே பாவிக்கப்பட்டவைகள். நியாப்பிரமாணத்தின் அந்நாட்களில், சட்டத்தை மீறுபவனுக்கு சட்டென தண்டை கிடைக்கும்.  அவ்வகை நியாயப்பிரமாணங்களில் மனிதர்கள் கட்டுண்டவர்களாயிருந்தார்கள். பிரமாணத்திற்கு பலர் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும், சட்டத்திற்கு மறைவாய் தவறு செய்யும் அளவிற்கு மனிதனின் மனநிலை பாவத்தில் கட்டுண்டு கிடந்தது.

கொலை செய்தாலோ, திருடினாலோ, விபச்சாரம் செய்தாலோ அது தெரியவந்தால் மாத்திரமே அவன் தண்டிக்கப்படுவான். தெரியவில்லையென்றால், தன்னைத் தானே மறைத்து தப்பித்துக்கொள்ளுவான், தண்டனையை நேரடியாக தேவனிடமிருந்து பெறும் நிலைக்குத் தன்னைத் தள்ளிக்கொள்ளுவான். நியாயப்பிரமாணங்களுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்படாத மனிதனுக்காக, தேவன் அநேக தாசர்களைக் கொண்டு பேசினார், எழுதிக்கொடுத்தார், அப்படியே, ஆவியானவரின் துணையோடு நமது மனம் திரும்புதலுக்காகவும், நமது இரட்சிப்பிற்காகவும், தேவனை நாம் அறிந்துகொள்வதற்காகவும், அநேகருக்கு தேவனை அறிவிப்பதற்காகவும் எழுதப்பட்டு இன்று நமது கையில் இருப்பதே வேத புத்தகம். தேவன் பேசியவைகள், மனிதன் பேசியவைகள், தூதன் பேசியவைகள், ஆவியானவரின் ஆளுகைகள், இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், அவரின் அற்புதங்கள், உவமைகள், பல்வேறு தீர்க்கதரிசனங்கள், வாக்குத்தத்தங்கள், போதனைகள், அப்போஸ்தலர்களின் ஊழியங்கள் உட்பட பலவற்றை நாம் தேவனைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்துடனும், தேவனண்டை சேர்க்கப்படும் நோக்கத்துடனும் இவ்வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 

வேத புத்தகம், நாம் இந்த உலக கல்லூரிகளில் பயிலும் புத்தகங்கள் போன்றதல்ல. உலகக் கல்வியில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு புத்தகங்கள் கொடுக்கப்படும். கல்லூரியில் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டிற்கு முன்னேறும்போது, முதலாம் ஆண்டு பாடப்புத்தகங்களைக் காட்டிலும் மேன்மையான பாடங்களை உள்ளடக்கிய பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படும். ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தையின் கையில் இருக்கிற புத்தகங்களை, கல்லூரி பயிலும் மாணவர்கள் கையில் கொடுப்பதில்லை இது உலகக் கல்வி.

ஆனால், தேவனாலும் அவரது ஆவியானவரின் துணையோடும், பல பரிசுத்தவான்களோடும் எழுதப்பட்ட வேதமாகிய பாடப்புத்தகம் இவ்வுலகக் கல்வியின் புத்தகங்களோடு ஒப்பிடத்தக்கதல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும், அதாவது இரட்சிக்கப்படவும் (இறைவனின் பள்ளியில் சேரவும்) அழைப்பிதழாக அந்த பாட புத்தகம்தான் கொடுக்கப்படுகிறது, இரட்சிக்கப்பட்டு ஆலயத்திற்கோ, ஜெபக்குழுவிற்கோ முதன் நாள் வருபவருக்கும் அதே வேதபுத்தகம்தான் கொடுக்கப்படுகிறது. இரட்சிக்கப்பட்டு, பலகோடி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்படும் ஊழியர்கள் கையிலும் அதே புத்தகம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறியோர், வாலிபர், பெரியோர், ஊழியர் என அனைவரும் கையில் வைத்திருப்பது ஒன்றே. அது பரிசுத்த வேதமே. பாடப்புத்தகம் ஒன்றே, எனினும் அவரவர் நிலையின்படி, வளர்ச்சியின்படி, புரிந்துகொள்ளுதலின்படி தேவன் கற்றுக்கொடுக்கும் விதங்களில்தான் வித்தியாசங்கள்.

கையில் வேதப்புத்தகம் இருக்கிறது என்பதனால், எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என எவரும் சொல்லிவிடமுடியாது. ஏனெனில், வேதத்தில் தேவன் எழுதி வைத்திருப்பவைகளின் அதிசயமான பல காரியங்கள் தேவனை அறியாத, தேவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காத மனிதனால் புரிந்துகொள்ள இயலாதவை. அப்படிப்பட்டோர், தங்கள் கையில் உள்ள வேதபுத்தகத்தை ஒரு கதைப்புத்தகம் போலத்தான் வாசிப்பார்கள். புரிந்துகொள்ள ஒரு மனிதன் விரும்புவான் என்றால், வேதம் பிரதானமாய் சொல்லும் இயேசுவையும், அவர் சிலுவையில் சம்பாதித்து மனுக்குலத்திற்குக் கொடுத்த இரட்சிப்பையும் அடையும்படி, எளிய நடையில் எழுதப்பட்ட சுவிசேஷத்திற்கே முதலில் செவிமடுக்கவேண்டும். முதலில் அவன் தன்னை பாவி என அறிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இயேசுவுக்கு தனது வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கவேண்டும். இதுவே, கல்லூரிக்குள் நுழையும் கதவு, பாடசாலையின் முதல் படிப்பினை.

இந்த உலகத்தில் வாழும் நாட்களில் நமது கையில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் இறைவனின் இதயத்துடிப்புகள் அடங்கிய பாடப்புத்தகம். இதனை மரணத்திற்கு முன் படித்து, புரிந்துகொண்டு பரலோகத்தில் நுழையத் தடுக்கும் பாவங்களைக் களைந்தெறிந்துவிட்டு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, நித்திய ஜீவனைப் பெற்று அவரோடு வாழும் அளவிற்கு தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வோர். மரணத்திற்குப் பின் நடக்கவிருக்கும் நியாயத்தீர்ப்பு என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்று பரலோகில் நுழைவார்கள்.

முதல்வர்

இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவர் வேதத்தை வாசிக்கத் தொடங்கும்போது, அவருக்கு உடன் நின்று உதவி செய்பவர் ஆவியானவரே, ஆரம்பம் முதல் வாழ்வின் இறுதிவரை ஆசிரியரும் அவரே. பாடப் புத்தகமும் மாறப்போவதில்லை, பாடத்தைச் சொல்லிக்கொடுப்பவரும் மாறப்போவதில்லை. ஆவியானவரின் துணையின்றி, அவரால் எழுதப்பட்ட இந்த வேத வசனத்தின் சில ஆழமான அணுக்களை அடைய முடியாது, அஸ்திபாரங்ளைத் தொட முடியாது. இன்றைய காலத்தில் இருக்கிற வீடியோ சி.டி நல்லதோர் உதாரணம். வீடியோ சி.டி யினைப் கையில் எடுத்துப் பார்க்கும்போது, அதில் பதிந்திருக்கும் மூன்று மணி நேர படங்கள் அப்படியே கண்ணில் தெரிந்துவிடுவதில்லை. அதனை நம் கையில் வைத்திருக்கும்போது, அந்த சி.டியில் என்ன படம் இருக்கிறது? யார் இந்த சி.டியினை வெளியிட்டது? அவரைத் தொடர்பு கொள்ளும் முகவரி என்ன? அந்த சி.டி எங்கு தயாரிக்கப்பட்டது? என்பது போன்ற விபரங்கள் அடங்கிய வெளி வாசகங்கள் மட்டுமே நமது கண்களில் தென்படும். ஆனால், அதில் உள்ள படத்தை வெளிக்காட்டும் சி.டி பிளையரினுள் அதனை நுழைத்துவிட்டால், அந்த சி.டி பிளையர் அதிலுள்ள படத்தை நமக்கு வெளிக்காட்டும்.

அப்படியே வேதமும், கையில் வைத்திருக்கும்போதும், ஏனோ தானோ என்று வாசிக்கும்போதும், எப்போதாவது கையில் தூக்கிக்கொண்டு ஆலயம் செல்லும்போதும் ஏதோ ஒரு சில தகவல்களை மாத்திரமே தரும். போதகரோ அல்லது வேறெந்த ஊழியரோ அதனை விளக்கிச் சொல்லும்போது, பிரசங்கிக்கும்போது சில அந்தரங்க பொக்கிஷங்கள் தென்படும். நம்மையும் வேதத்தையும் இணைக்கும் சி.டி பிளையரைப் போன்ற ஆவியானவரின் துணை நமக்குத் தேவை. ஏனேனில், 'அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்' (யோவா 16:14) என்பது இயேசுவே ஆவியானவரைக் குறித்துச் சொன்ன செய்தி. தனது ஞானத்தினால் எல்லா வேத வசனங்களையும் உலக மனிதன் எடைபோட்டுவிடமுடியாது. வேத வாக்கியங்கள் ஆவியானவரின் துணைகொண்டே எழுதப்பட்டவை, எனவே மேலும் அதன் இரகசியங்களை அறிய ஆவியானவரின் துணை தேவை. இல்லையென்றால் கற்றுக்கொள்ள முடியாது, கையில்தான் வைத்திருக்கவேண்டும்.

எவரும் விளங்கும் அளவிற்கு இயேசுவின் பிறப்பையும், வாழ்க்கையையும், சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் இரட்சிப்பிற்கேற்ற செய்திகளையும் கொண்டிருக்கும் பகுதிகள் ஆரம்பப் பாடங்கள், எம்மனிதரும் தெரிந்துகொள்ளக்கூடியவை, அறிந்துகொள்ளக்கூடியவை, புரிந்துகொள்ளக்கூடியவை. ஆனால், அவைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அடுத்த படிக்குள் அந்த மனிதன் முன்னேற முடியும், இதுவே முதல்வர் நடத்தும் முதற்பாடம். இந்தச் செய்தி வேதத்தில் ஆழத்தில், கண்காணும் அளவில் மேலேயேதான் மிதந்துகொண்டிருக்கிறது, கையில் எடுப்பது மட்டும்தான் நமது வேலை.

புரியவில்லை என பதறவேண்டாம்

ஒரு சிறு உதாரணத்துடன் இதனை விளக்க முற்படுகிறேன். ஒரு வீட்டிலுள்ள பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். முத்த மகனுக்கு 40 வது, இரண்டாவது மகனுக்கு, 30 வயது, மூன்றாவது மகனுக்கு 20 வயது, நான்காவது மகனுக்கு 10 வயது ஐந்தாவது மகளுக்கு 5 மாதங்கள். வீட்டில் எல்லாரும் சாப்பிடும் உணவை அப்படியே பிறந்து ஐந்து மாதங்களே ஆன மகளுக்குக் கொடுத்துவிடமாட்டார்கள். பிரியாணியே செய்யப்பட்டாலும், ஐந்து மாதங்கள் ஆன அவளுக்கு பால்தான் கிடைக்கும். இதனை பெற்றோரின் பாரபட்சம் என்று சொல்லிவிட முடியுமா? யாருக்கு எதனை எப்போது கொடுக்கவேண்டும் என்பதனை அறிந்தவர்கள் அவர்கள்தானே. அப்படியே வீட்டில் பிள்ளைகளுக்கு வேலைகளையும், பொறுப்புகளையும் வழங்கும் விதமும் பிள்ளைகளின் வயதிற்கு ஏற்றார்போலவே காணப்படும்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, குழந்தைகளாய்க் காணப்படும் நம்மையும் ஆவியானவர் அப்படியே நமக்கேற்ற போஜனத்தைக் கொடுத்தே வளர்க்கிறார். எனவே மற்றவர்களுக்குக் கிடைக்கிறது நமக்குக் கிடைக்கவில்லையே, அந்த வெளிப்பாடு எனக்கு இல்லையே என வருத்தப்படவேண்டாம், காத்திருங்கள், கர்த்தருடைய பிள்ளைகள் நீங்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரும்போது, அதிக ரகசியங்களை அறிந்துகொள்வோம், அத்துடன் அதிக பொறுப்புக்களை அவரிடத்திலிருந்து பெற்று அவருக்காக செயல்படுகிறவர்களாக மாறிவிடுவோம்.

புதிதாக வேதத்தை வாசிக்கத் தொடங்கும்போது, எல்லாம் ஒரே நாளில் உடனே நமக்குப் புரிந்துவிடுவதில்லை. அப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பமும் வேகமும் அவரை அறிந்த உடன் மனதில் இருந்தாலும், தேவன் படிப்படியாகவே ஆவியானவரின் துணைகொண்டு அதனை அவரவர் பெலனுக்கேற்ப கற்றுத்தருகிறார். வேதத்தை வாசிக்கும்போது விளங்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ கடினமான காரியங்களை, தேவ மனிதர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது தவறல்ல எனினும் அதற்கு மேலாக தன் பிள்ளைக்கு தேவனே கற்றுத் தருவது நிச்சயம். அவர் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்த்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறவரல்ல, இரட்சிக்கப்பட்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட நாம் அவருடன் பந்தியிருந்து மேஜையில் போஜனம் பண்ணவேண்டியவர்கள். எனவே, சோர்ந்துபோகவேண்டாம், மற்றவர்கள் இந்த அளவு வேதத்தை அறிந்திருக்கிறார்களே என தளர்ந்துவிடவேண்டாம், வேந்தன் உனக்குள் இருக்கும்போது வெற்றி உனக்குத்தான். முதல் பந்தியில் திராட்சை ரசம் இல்லாமற் போய்விட்டாலும், இரண்டாம் பந்தியில் சுவையான ரசம் கிடைக்கும் கவலைப்படாதே. அவர் திராட்சைச் செடி, நீ கொடி. திராட்சைச் செடியே அருகிலிருக்கும்போது, கொடியாகிய உன்னில் பழம் பழுக்காமலா போய்விடும். அவர் கனிகொடுக்கிறவர். அவரது செடியில் கனி உண்டாகவேண்டும் என்றால் அது உன்னில் தான் பழுத்துத் தொங்கவேண்டும். மற்றவர்கள் வந்து பார்ப்பார்கள் பறிப்பார்கள். இயேசு உன்னோடுதான் இருக்கிறார், அவர் உனக்கு வசனங்களை விளக்கும் வேளை வரும். அவர் ஜீவ தண்ணீரல்லவா. அவரை விசுவாசிக்கிறவனின் உள்ளத்திலிருந்தும் ஜீவ தண்ணீர்களுடைய நதிகள் பாய்ந்து ஒட விரும்புகிறவரல்லவா, ஆபிரகாமுக்கு மறைக்காமல் வெளிப்படுத்தினவரல்லவா, உனக்கும் தக்க நாட்களில் வெளிப்படுத்துவார். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர்.

எதை வாசிப்பது முதலில்?

எங்கிருந்து தொடங்குவது? எதை வாசிப்பது? எப்படி புரிந்துகொள்வது என்பதனையும் தெரிந்துகொள்ளுதல் நல்லது. ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்தின் விசேஷம் வரைக்கும் அப்படியே தொடர்ச்சியாக வாசிப்பதில் தவறில்லை, என்றாலும் எளிதில் புரிந்துகொள்ள சில வழிகளைக் கையாளுவது சிறந்தது. முதன் முதல் வேதம் வாசிக்கத் தொடங்வோர்,

இயேசுவின் வாழ்க்கையும், செய்திகளும், மனிதானாய்ப் பிறந்து மனிதருக்கு அவர் கொடுத்த ஆலோசனையும் அடங்கிய மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய சுவிசேஷங்கள் என்ற தலைப்பின் கீழுள்ள புத்தகங்களை வாசிப்பது நல்லது.  இவைகளில் இயேசுவின் வாழ்க்கை, அவர் விட்டுச் சென்ற மாதிரி, நமக்கு அவர் சொன்ன செய்தி அத்தனையும் நம்மை சீடராக்கவும், சுவிசேஷம் அறிவிப்பவர்களாக மாற்றவும் போதுமானவைகள்.

அதனைத் தொடர்ந்தோ அல்லது அவைகளை வாசித்துக்கொண்டிருக்கும்போதோ நீதிமொழிகள், சங்கீதம் மற்றும் பிரசங்கி ஆகியவற்றை இரண்டாம் பகுதியாக வாசிக்கலாம்.

இத்துடன், புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் முதல் யூதா வரையிலான அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களையும், மற்ற அப்போஸ்தலர்களின் நிருபங்களையும் வாசிக்கலாம்.

தொடர்ச்சியாக வெளிப்படுத்தின விசேஷத்தினை வாசிக்கலாம். அதன் பின்னர், ஆதியாகமத்திலிருந்து யோபு வரையிலான புத்தகங்களை வாசிக்கலாம்.

இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்று நான் கட்டாயமாக எழுதவில்லை எனினும், இப்படி வாசித்ததால் நான் பயனுற்றதால் எழுதுகிறேன். எத்தனையாய் வேதத்தை வாசித்தாலும், வாசித்தனை ஒத்துக்கொள்வதற்காகவும், அதன் அர்ப்பணத்திற்காகவும் ஓர் ஜெபம் அவசியம் தேவை. எப்படியாவது கிரமமாக வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களிலோ முழு வேதத்தையும் ஒரு முறை வாசித்துவிட முயற்சித்தால் நல்லது, என்றபோதிலும் அப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் தள்ளி அவசர அவசரமாக வாசித்து ஒன்றும் புரியாமம் ஓட வேண்டிய அவசியமில்லை. ஒரு வருடத்திற்குள் கட்டாயம் வேதத்தை வாசித்து முடித்திருக்கவேண்டும் என தேவன் வற்புறுத்தவும் இல்லை, உங்களால் முடிந்த வேகத்தில் ஓடுங்கள், வாசியுங்கள், வளருங்கள் தேவ ஆவியானவர் உடனிருப்பார். 

குறிப்பு எடு

பாடப்புத்தகம், முதல்பாடம் மற்றும் முதல்வர் என்றெல்லாம் அறிமுகப்படுத்தினேன், ஆனால், நீங்கள் உங்களை மாணவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். ஏதோ, கடமுறைக்கு ஓதிவிட்டுச் செல்ல வேதப்புத்தகம் ஒரு மந்திரப்புத்தகம் அல்ல. தேவன் அன்றன்று உனக்குக் கற்றுத்தரும் காரியங்கள் அபூர்வமானவைகள், ஒருவேளை உலகத்தில் வேறு எந்த மனிதருக்கும்கூட அவர் கற்றுக்கொடுத்திராததை உனக்கு அன்று கற்றுக்கொடுத்திருக்கலாம், அனால், அதனை பத்திரப்படுத்துவதும், காலம் வரும்போது உலகோர்க்கு பரப்புவதும் உன் பொறுப்பு. வேதத்தைத் திறக்கும்போது தேவன் கற்றுத்தரும் காரியங்கள் நமக்கு மட்டும்தான் அல்லது தற்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் மக்களுக்கு மட்டும்தான் என நினைத்துவிடக்கூடாது, அது முழு உலகத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டிய செய்தியாக இருக்கலாமே. இயேசு பிறப்பின் செய்தி மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது, அவர்களுகுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் சொல்லவே. இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு அதிகாரத்தினை வாசிக்கும்போது, கர்த்தர் உன்னோடு இடைபடுகின்ற அல்லது பேசுகின்ற அல்லது உன் மனதினால் அதிக நேரம் ஈர்க்கப்படுகின்ற, கவனத்தை தன் பக்கம் இழுக்கின்ற, மீண்டும் வாசிக்க வைக்கின்ற வசனத்தை அடிக்கோடிட்டுக்கொள்ளலாம் அல்லது தனியே எழுதி வைத்துக்கொள்ளவேண்டும், அவைகளில், உனக்கு தேவனின் செய்தி புதைந்திருக்கும். சில நேரங்களில் அந்த வசனத்திற்கு ஒத்த வேறு வசனங்கள் உனக்கு நினைவில் வரும். அப்படிப்பட்டவைகளைக் கோர்த்துப் பார்த்தால் ஓர் செய்தி உனக்குக் கிடைக்கும். 'கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்'(ஏசா 34:16). நான் இப்படியாய் நினைப்பதுண்டு, என்றோ நான் பார்த்துவைத்த பெண்ணுக்கு (வசனத்துக்கு) ஒத்த மாம்பிள்ளை (வசனம்) எங்கோ கிடைக்கும்போது திருமணம் நடத்திவிடலாம், ஒரு செய்தியை பிரசங்கித்துவிடலாம் என்பதையே குறிப்பிடுகிறேன்.

வேத வாசிப்பிற்கென்று பிரத்தியேகப்படுத்தப்பட்டதோர் டைரி அல்லது குறிப்பேட்டினை வைத்துக்கொள்வது அவசியம். வேத வாசிப்பின்போது, தேவன் சொல்லித்தரும் ரகசியங்களை பலர் குறிப்பெடுக்காமல், அப்போது மாத்திரம் சுவைத்துவிட்டு அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுகின்றனர். நமது மூளை கணணியைப் போன்றதல்ல, நான் நினைப்பதை அப்படியே பதிவெடுத்துக்கொள்வதற்கு. ஒரு சில நாட்களின் தியானங்களை நினைவில் கொள்ள நமக்கு பெலனிருந்தாலும், நெடுநாள் தியானங்களை நினைவாக்குவதற்கு குறிப்பேடு நிச்சயம் அவசியம். இப்படிக் குறிப்புகளை எழுதி வைப்பதனால், எங்காவது பிரசங்கிக்கவும் அவைகள் உதவும், அல்லது உன் கையில் கொடுத்தவைகளை விதைப்பதற்கு அவரே விளை நிலத்தை ஏற்படுத்திக்கொடுப்பார். எத்தனயோ காரியங்களை தேவன் சொல்லிக்கொடுத்திருந்தும், அவைகளை எழுதி வைத்திராவிட்டால், எத்தனையோ பொன்னையும் பொருளையும் வாங்கியிருந்தும், அதனை பத்திரப்படுத்திவிடாத பக்குவமற்றவர்களாகவே நாம் காணப்படுவோம். அவர் வழியருகே விதைக்கிற நிலமாயிராதே. நல்ல நிலமாயிரு, அவர் விதைத்தபின்னர் அதனை உலகிற்குக் கொண்டு சென்று விளைச்சலை அவருக்குக் கையளிக்கும் அறுவடையாளனாயிரு.

திடீரென எங்காவது ஜெபக்குழுவில் அல்லது, சிறு சிறு ஜெபக் கூடுகைகளில் யாராவது நம்மை நோக்கி எதாவது வேதத்திலிருந்து சில காரியங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன் என்று சொல்லும்போது, மீண்டும் தேவனிடத்திலேயே ஓடும் வேகமும் வியர்வையும் உண்டாக வாய்ப்புகள் ஏற்படும். நாம் பங்குபெறும் கூட்டங்களில் திடீரென பிரசங்கிக்க அழைப்பு வருமாயின், அதனை தட்டிக்கழிக்கும் மனநிலையே முதலில் மேலோங்கும். 'இத்தனை நாள் உனக்குக் கற்றுத் தந்தவைகள் எங்கே?'என்று தேவன் அப்போது கேட்பாராயின், விடை மௌமாகத்தான் விளையும்.

வேதம் வாசிப்பதோடு மாத்திரமல்ல, வேத வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வதும் நல்லது. இயேசுவை சோதித்துப்பார்த்த சாத்தானிடம் 'எழுதியிருக்கிறதே, எழுதியிருக்கிறதே' என்று இயேசு வேத வசனங்களைச் சொல்லியே ஜெயித்தார். அப்படியே நாமும், சோதனைகள் வரும்போது, வேதத்தில் என்ன எழுதியிருக்கிறது என ஆராய்ந்து அறிந்துகொண்டு அதனை ஜெயிக்கலாம். சாத்தான் வேத வசனங்களைக் கொண்டே இயேசுவை ஜெயிக்க முற்பட்டதுபோல, ஊழியர்களைப்போல உலாவந்து, வேத வசனத்திற்கு விரோதமாகப் பேசுவோரையும் அடையாளம் கண்டு தப்பிக்கொள்ளலாம். எத்தனை பெரிய ஊழியர்களாக இருந்தாலும், அவர்கள் சொல்வதோ அல்லது பிரசங்கிப்பதோ வேதத்திற்கு விரோதமானதாயிருந்தால் அவைகளைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட கள்ள உபதேசங்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டுமென்றால், உள்ளம் வசனங்களால் நிறைந்திருக்கவேண்டும்.

வேதத்தை வாசிக்கும்போது கவனிக்கவேண்டிய சில தொடக்க நிலை அறிவுரைகள்:

வேதத்தை வாசிக்கத் தொடங்கும் தொடக்ககால இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஆறு முக்கிய காரியங்களை மனதிற் கொண்டு வாசிக்கவேண்டும்.

1. வாசிக்கும் வசனத்தின் அடிப்படையில் நான் எப்படி இருக்கிறேன்?
2. என்னிடத்தில் காணப்படும் குறை அல்லது நிறை என்ன?
3. என்னோடு தேவன் பேசுவது என்ன?
4. தேவன் எப்படிப்பட்ட குணமுடையவராக காணப்படுகிறார்.
5. மற்றவர்களுக்காக என்னை என்ன செய்ய அல்லது சொல்ல சொல்கிறார்.
6. அவருக்காக நான் எப்படி செயல்பட விரும்புகிறார்.

வேதத்தை வாசிக்கும்போதெல்லாம் இந்த ஆறு காரியங்கள் மனதில் பதிந்திருப்பது நல்லது. இவைகளில் பிசகுதலோ அல்லது விடுபடுதலோ இல்லாது வேதம் நடத்தும் வழியில் நடப்பதே சிறந்த தேவப் பிள்ளையின் வாழ்க்கை.

வாசிக்கும் வசனத்தின் அடிப்படையில் எனது வாழ்வு எப்படி இருக்கிறது என்பதனை அறிந்துகொண்டு அவைகளில் குறைவுகள் காணப்படுமாயின் நிவிர்த்தி செய்யவேண்டியதும், நிறைவுகள் காணப்படுமாயின் மேலும் அவைகளைக் காத்துக்கொள்வதும் அவசியம். தேவன் என்னோடு என்ன பேசுகிறார் என்ற அறிவு, நம்மை மேலும் அவரை அறிய வைப்பதுடன், நம்மை பரிசுத்தமுடையவர்களாகவும், கறை திரையற்ற மாசற்றவர்களாக இவ்வுலகத்தில் வாழவும் உதவும். மற்றவர்களுக்கு என்ன சொல்லுவோம், என்ன பிரசங்கிப்போம், மற்றவர்களுக்கான இன்றைய செய்தி என்ன? என்ற கேள்வி மனநிலையுடனேயே வேதத்தைப் பார்க்கும் விசுவாசிகளானாலும், ஊழியர்களானாலும் தங்களுக்கு தேவன் வைத்திருக்கும் செய்தியினை அன்று வாசிக்கவும் ருசிக்கவும் இயலாதுபோய்விடுவோர். ஒருவேளை அது அவர்களில் அன்றைய நாளில் ஒட்டியிருந்த கறைகளைத் திருத்தும் செய்தியாயிருந்தால் கவனிக்கத் தவறிவிடுவார்கள். முடிவில் கறைகளோடும், தேவன் விரும்பாதவற்றை விடாதோராயும் வாழுவார்கள்.
மற்றவர்களையே பார்க்கும் மனநிலை வேதம் வாசிக்கும்போது முதலில் உண்டாகிவிட்டால், 'உன் கண்ணில் இருக்கிற உத்திரம்' தெரியாது. மற்றவர்களுக்காக தங்களை ஊழியக்காரர்களாக்கி, தேவனுக்கு முன்பாக தங்களை உதவாக்கரைகளாக்கிவைத்திருப்போர் பலர் உண்டு, ஜாக்கிரதையாயிருப்போம்.

வேதத்தை வாசிக்கும்போது, நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டும், அடுத்து தேவன் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொண்டு அவரைப் பின்பற்ற ஒப்புக்கொடுத்து, அவரை ஆராதிக்கவேண்டும். அத்துடன், அவரது மேன்மையான பரிசுத்தமான, உயர்ந்த, உன்னதமான நிலைகளும் குணங்களும் நமது கண்களுக்குத் தெரியும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவருக்கு முன் நிறுத்திப் பார்க்கவேண்டும். மனிதர்களோடு மாத்திரமே நம்மை ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டேயிருந்தால், நமது கண்களுக்கு நாமேதான் உயர்ந்தவர்களாகக் காணப்படுவோம், உயர்ந்த பிரசங்கியாராக, ஊழியராக, பாடகராக, ஆராதனை செய்பவராக, சபை மேய்ப்பராக நம்மையே நாம் உயர்த்திப் பார்த்துக்கொள்ளுவோம். நமக்குப் பின்னால் ஆவிக்குரிய வாழ்க்கையினைத் தொடங்கியர்வளை நாம் வழி நடத்தும் பொறுப்பு நமக்கு உண்டு, ஆனால் அவர்கள் மேலேயே விழிகளை வைத்து வைத்து அவர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தோராக் கருதிக்கொண்டு தன்னைக்காட்டிலும் தன்னை அழைத்த தேவன் பெரியவர் என்பதை மறந்துவிடும் ஆபத்தான நிலையும் வாழ்க்கையில் ஏற்பட்டுவிடலாம்.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் தேவாலயத்தில் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.(லூக் 18:0-13)

தேவனுக்கு முன்னால் நிற்கும்போது தன்னையும் தேவனையும் பார்க்கவேண்டிய பரிசேயன், தன்னையும் மனிதனையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான், விளைவு தேவ பார்வை அவனை விட்டுக் கடந்துபோனதுதான். ஏசாயா தீர்க்கதரிசியும் அப்படிப்பட்ட மனநிலையில் வாழ்ந்த ஊழியருள் ஒருவனாயிருப்பினும், தேவன் சந்தித்தபோது, 'ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே' (ஏசா 6:5) என்று தன்னை அர்ப்பணித்துவிட்டான்.

வேதத்தை வாசிக்கும்போது, தேவனைப் புரிந்துகொண்டு, அவருக்கு முன் நான் எப்படி வாழவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, மனிதருக்கு முன்பாக சாட்சியாக வாழவேண்டும். நாம் அந்தரங்கமாய் செய்கிற ஜெபத்திற்கும், வேத வாசிப்பிற்கும், தேவனுக்கடுத்த காரியங்களுக்கும் வெளியரங்கமாய் பதிலளிக்கிறவர் தேவன். தேவனோடு நமது வாழ்க்கை வேதத்தின்படி சரியாக இருப்பின், 'உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு இராஜாக்கள் வருவார்கள்' என்பது நமக்கு விடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். தேவனோடும், தேவ வார்த்தையோடும் நெருங்கி நெருங்கி ஒட்டி ஒன்றாகி வாழும் நம்மை நோக்கி உலகத்த்தின் ஜனங்களை வரச்செய்வார் தேவன்.

எனவே இயேசு, 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத் 5:16) தேவனிடத்திலிருந்தும், வேத வசனங்களிலிருந்தும் நாம் பெறும் ஒளி உலக மக்களுக்கு முன் பிரகாசிக்கவேண்டும். அந்தரங்கத்தில் வேதம் வாசித்துவிட்டு, உலகத்திற்குள் பிரவேசிக்கும்போது ஒளியை அணைத்துக்கொண்டு திரியக்கூடாது. நாம் யாருடன் இருந்தாலும், எங்கு இருந்தாலும், எந்நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும் நம்மில் இருக்கிற தேவன் கொடுத்த ஒளி ஒளிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும்.

தேவ ஒளியினைப் பெற்று மற்றவர்களை மறந்துவிட்டு தேவனுக்கு முன்பாகவே நின்று கொண்டு பிரகாசித்துக்கொண்டிருப்பதில் என்ன பயன்? உலகத்திற்கு பிரகாசிப்பதற்காகத்தானே உனக்கு ஒளி கொடுத்தார். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் (மத் 5:14,15). தேவனுடைய ஒளியைப்  பெற்றுக்கொண்டு அதனை யாருக்கம் பிரயோஜனமற்றதாக வைத்திருக்கக்கூடாது. கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேவன் உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பதை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள், அப்பொழுது தேவன் மேலும் மேலும் உங்களுக்கு ரகசியங்களைச் சொல்லிக்கொடுப்பார். வேத புத்தகமே விலைபெற்ற செல்வம் நீயே என்ற ஓர் பழைய கீர்த்தனைப் பாடல் நினைவில் வருகிறது.

வேதபுத்தகமே என்ற பாடலை என்னால் இயன்ற அளவு கணணியில் பாடி பதிவு செய்துள்ளேன் கேளுங்கள், பாடிப்பாருங்கள்.

veda puthagame song for blogger

வேதபுத்தகமே வேதபுத்தகமே
வேதபுத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே


பேதைகளின் ஞானமே - பெரிய திரவியமே
பாதைக்கு நல்தீபமே - பாக்கியர் விரும்புந் தேனே


என்னை எனக்குக் காட்டி - என் நிலைமையை மாற்றி
பொன்னுலகத்தைக் காட்டிப் போகும் வழி சொல்வாயே


துன்பகாலம் ஆறுதல் - உன்னால் வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் - என்றும் நம்பினபேர்க்கே


பன்னிரு மாதங்களும் - பறித்துண்ணலாம் உன் கனி
உன்னைத் தியானிப்பவர் - உயர் கதி சேர்ந்திடுவார்

Friday 20 July 2012

காதலிக்கலாமா?

'காதல் காற்று' என்ற கட்டுரையினை உங்கள் இணையதளத்தில் வாசித்தேன். பல புரிந்துகொள்ளவும், சில ஏற்றுக்கொள்ளவும் கடினமாயிருந்தது. காதைலைப் பற்றி நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்? காதலிக்கலாமா?

காதலிக்கலாம், காதலிக்கக்கூடாது என ஒரு வார்த்தையில் நான் விடையளிக்கவேண்டும், விளக்கமளிக்கவேண்டாம் என நீ எதிர்பார்ப்பதை உனது கேள்வியிலேயே நான் புரிந்துகொண்டேன். 'ஏற்றுக்கொள்ள கடினமாயிருந்தது' என நீ எழுதியிருப்பதிலேயே, நீ காதல் பக்கம் நிற்கிறாய் என்பது தெளிவாகிறது. நெருப்பும் பஞ்சும் சேர்ந்து பெற்றோரைப் பற்றவைப்பதை விட பெற்றோரால் நெருப்பும் பஞ்சும் பற்றவைக்கப்படுவதே இறைவனது நியதி. ஒரு கடையில் உள்ள பொருளை பார்த்து வாங்க விரும்பலாம், பெற்றோரிடம் வாங்கித்தர கேட்கலாம் தவறில்லை; ஆனால், அந்தப் பொருள் கையில் வந்து கிடைப்பதற்கு முன்னால் அதையே நினைத்து கனவு உலகில் மூழ்குவதையே நான் காதல் என்கிறேன். கடைக்காரரும் பெற்றோரும் இணைந்து அப்பொருளைக் உனது கையில் கொடுப்பதற்கு முன்னால் அப்பொருளுக்கும் உனக்கும் எந்த உறவும் உனக்கு இல்லை என்பதை புரிந்துகொள்.

Monday 26 March 2012

காத​லைப் பற்றி



கீழே உள்ள கேள்விகள் அனைத்தும் நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் என்னிடத்தில் வாலிபர்கள் கேட்டவை, அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும் உங்களுக்கும் பதிலாகக்கூடும் என்ற நோக்கத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

நான் பார்த்த பெண்ணின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் எனது பெற்றோர் அவளை ஏற்க மறுக்கின்றனர்,  என்ன செய்வது?

முழு நம்பிக்கை என்று எதைச் சொல்கிறாய் என எனக்குப் புரியவில்லை. அவள் மேல் உள்ள ஆசையினால் வருகின்ற வார்த்தைகள் இவை. பெற்றோருடைய பந்தம் எல்லா சொந்தங்களைக் காட்டிலும் பிரதானமானது, முக்கியமானது என்பதை அறிந்துகொள். உனக்கு மட்டுமல்ல நீ மணமுடிக்கும் பெண் உனது குடும்பத்துடன் இசைந்து வாழவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. திருமணம் முடித்து பெற்றோரைப் பிரிந்து சென்று தனியாக வாழ்க்கை நடத்தும் (வேலையின் நிமித்தம் செல்வோரை அல்ல, பெற்றோரை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு போவோர்) நிலை இன்று தேசமெங்கும் பெருகி வருகின்றது. இதற்குக் காரணம், மணமுடித்த பெண் குடும்பத்துடன் ஒத்துப்போகாததே. பெண்ணுக்காக பெற்றோரையே ஒதுக்கும் நிலை உருவாகிவிடுகின்றது. பெற்றோர் எந்த காரியத்தைக் காட்டி வேண்டாம் என்று சொல்லுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அது சரியானது என்று அறிந்தால் அவர்களுக்கு கீழ்ப்படிவதுதானே நல்லது. ஒரு பெண்ணுக்காக பெற்றோரை விலைகொடுப்பது நியாயமானதன்று. எப்போதும் பெற்றோருடன் இணைந்துகொண்டால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்

வேதத்தில் ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான், அவர்கள் ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதியாகமம் 26: 34,35) என்று வாசிக்கின்றோம். பெற்றோரை மனமடிவாக்கும் குணமுடைய பெண் தேவையா? அவளால் ஒரு நாள் உனக்கும் மனமடிவு உண்டாகும்.  

முதன் முதல் ஒரு வாலிபன் தனது காதலை என்னிடம் வெளிக்காட்டும்போது நான் என்ன செய்யவேண்டும்?

விலகிச் செல்வதுதான் உகந்தது, வலையில் மாட்டிக்கொண்டு சேலையை ஏன் கிழித்துக்கொள்ளவேண்டும். நீ அவனோடு ஏதாகிலும் சந்தர்ப்பங்களில் நெருங்கிப் பேசியிருந்தால் அவனுக்கு இந்த காதல் எண்ணம் வந்திருக்க வாய்ப்பு உண்டு. அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட பின்னர் நீ அவனிடமிருந்து உன்தை; தூரப்படுத்திக்கொள். நீ விலகிச் சென்றாலும் அவன் உன்னைத் தொடர்ந்து வந்தால் பெற்றோரிடமோ, பெரியவர்களிடமோ எடுத்துச் சொல்லி மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கன்னியே நீ கண்ணாடி காதலிக்கும் வாலிபன் உன்னைத் துண்டாடவிடாதே

நான் ஒரு வாலிபனை சகோதரனாகத் தான் எண்ணிப் பழகினேன், ஆனால், அவன் இப்போது என்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான், சகோதரனைப் போலப் பாவித்து பழகிய எனக்கு இது பெரிய அதிர்ச்சியாயிருக்கிறது

இத்தகைய நிலை இன்றைய நாட்களில் பலருக்கு உண்டாகின்றது. உனது நிலையைக் குறித்து முதலில் நீ திட்டமாயிருக்கவேண்டும். நீ நண்பனாகத்தானே எண்ணி பழகியிருக்கின்றாய், எனவே நண்பனிடம் சொல்வதுபோலவே பொறுமையாய், மெதுவாய், நான் காதலிக்கும் நோக்கத்தோடு பழகவில்லை, நீ என்றும் எனக்கு நண்பன்தான் என்று உனது நிலையை அவனு;ககுப் புரிய வை. புரிந்துகொண்டால் தொடரட்டும் நட்பு, இல்லையென்றால் தொலை நிங்க அவன் எல்லைக்குள் நுழையாதிருப்பது உத்தமம். என்றபோதிலும், நண்பர்கள் பிரிவதால் உண்டாகும் வருத்தம் உனக்கும் உண்டாகும், அது நட்பினால் உண்டான வலிமை, அதனைத் தாங்கிக்கொண்டு மறந்துவிடும் தன்மை உனக்கு வரவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்பாலரை நண்பர்களாகக் கொள்ளாதிருப்பது சாலச்சிறந்தது. முற்றிலும் தவறு என்று சொல்லவில்லை, அதில் ஆபத்து அதிகம் என்பதை சுட்டிக்காட்டவே இப்படிச் சொல்கின்றேன்

ஒரு வாலிபனுடன் தவறான உடலுறவு கொண்டுவிட்டேன், இப்போது அதனை விட்டுவிட்டேன், தவறென்று எண்ணுகின்றேன், அதுபோன்ற காரியங்களை இனி செய்யமாட்டேன் என்று முடிவெடுத்துள்ளேன். ஆனாலும் எனது மனதில் அந்த வடு அவ்வப்போது வந்து என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது, நான் என்ன செய்யவேண்டும்?

தவறு என்று நினைத்துவிட்டால், திருந்திவிட்டால் எந்த மனிதனுக்கும் மறுவாழ்வு உண்டு, கவலைப்படாதே. விழுந்ததையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிராமல், வரும் வாழ்க்கையை வடிவமைக்கப் பிரயாசப்படு. வேதத்தில் உள்ள ஒரு வசனத்தை உனக்கு ஞாபகமூட்டுகின்றேன். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம் (எபிரேயர் 9:14). இயேசுவை அண்டிக்கொண்டால் அந்த மனநிலையிலிருந்து உங்களை விடுவிக்க அவர் போதுமானவர். அவர் மன்னித்ததையும், மறந்துவிட்டதையும் நீங்கள் நினைத்து நிளைத்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை

எனது காதலைக் குறித்து பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கிறது? ஏதாவது வழி உண்டா?

பெற்றோரிடம் சொல்ல பயமாயிருக்கிறது என்று நினைத்து அவர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய்விடாதிருங்கள். ஓடிப்போவது கோழையான முடிவு. உங்களது பெற்றோருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவோ, உங்கள் உறவினர்களில் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் மூலமாகவோ தெரிவிக்க முற்படலாம். உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் வரும் நபர் இறை பக்தி உள்ளவராயிருப்பாரென்றால் நலமாயிருக்கும். என்னைப் பொருத்தவரையில் பெற்றோருக்கு இடையே பேசுவதற்கு தரகர்கள் தேவையில்லை. நல்ல நபர்கள் நடுவாக செயல்படுவார்களென்றால் அவர்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் சரியான ஆலோசனை கொடுக்கமுடியும். ஆனால், நடுவாக செயல்படும் அந்த நபரின் சரியான தீர்வுகளுக்கு கீழ்ப்படிய நீங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும்

எனது காதலிக்கு மற்ற வாலிபனுடன் தொடர்பு இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகின்றேன், என்ன செய்வது?

உடனே காதலை மறந்துவிட்டு, காதலியை விட்டுவிடுவது நல்லது. காதலித்தால் காதலியை நம்பினால்தான் அது காதல், நம்பாவிட்டால் மோதல் நிச்சயம் உண்டாகும் எச்சரிக்கை. சந்தேகம் என்ற வேர் உள்ளத்தில் உண்டாகிவிட்டால், அது வளர்ந்து வளர்ந்து வாழ்க்கையை நிச்சயம் அழித்துவிடும். உனக்கு சந்தேகம் உண்டானால் முதலில் உனது மனநிலையை சோதித்து அறிவது நல்லது. என்னை நேசிக்கும் நபர் யாரிடமும் பேசக்கூடாது என்ற மனநிலை இருந்தாலேயே இந்நிலை உண்டாகும். சாதாரணமாக யாரிடமும் பேசுவதைக் கூட மனம் சகித்துக்கொள்ளாது. இந்த சந்தேகத்துடன் அவளை திருமணம் முடித்தால், நீ வெளியே செல்லும்போது வீட்டில் மனைவியை உள்ளே வைத்துவிட்டு வெளியே பூட்டிவிட்டுச் செல்லும் கீழ்த்தரமான நிலையைக் கூட நீ கையிலெடுக்கும் சூழல் உண்டாகும்

என்னைக் காதலித்தவன் திடீரென இப்பொழுது நீ வேண்டாம் என்று சொல்லுகின்றான், என்ன செய்வது?

எனது கட்டுரையில் குறிப்பிட்டதுபோல அவன் காமத்திற்காக உன்னிடத்தில் பழகினவனாக இருக்கலாம். அப்படி நாங்கள் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று சொன்னால், அவனிடம் காரணத்தை அறிந்துகொள்ள முற்படலாம். நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்காவிட்டால், நம்பகமான நடுநிலை மனிதரின் துணையைத் தேடலாம். வீட்டில் எதிர்ப்பு, ஜாதி, மதம் போன்ற ஏதாவது பிரச்சனைகள் காதலனின் வீட்டில் உண்டாகி அதற்கு உனது காதலன் சம்மதித்து பெற்றோர் சொல்வது சரியே என்று நினைத்திருந்தால், விலகிக்கொள், வேறு வழி இல்லை. நான் அவனைக் காதலித்தது ஊருக்கெல்லாம் தெரியுமே என்னை திருமணம் முடிக்க யார் வருவார் என்று நினைப்பதெல்லாம் மெல்ல மெல்ல மறைந்துபோகும். காதலில் தோற்றவளாக அல்ல மனந்திருந்தி நற்பெயரெடுக்க முற்படு.

என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்று என்னை  மிரட்டுகின்றான் என்ன வழி

இப்படிச் சொல்லும் சிலர் சாவதுண்டு, சிலர் அப்படியாவது மிரட்டிப் பார்ப்போம் என்று காய் நகர்த்துவதுமுண்டு. உன் பக்கம் தவறு இல்லை என்றால் அந்த சாவுக்கு நீ  பொறுப்பல்ல, அது தற்கொலை, நீ கொலையாளியாகமாட்டாய். அவனது வாழ்க்கையில் அவன் எடுத்த முடிவு அது. அவன் செத்துவிடுவேன் என்று சொல்வதால் அவனைத் திருமணம் மடித்து நீ வாழ்க்கையில் செத்துவிடாதே. ஒருதலைக் காதல் கொள்ளும் வாலிபர்கள் இம்முறையைக் கையில் எடுப்பதுண்டு. காதலிக்கும்போது, புகைப்படங்கள், கடிதங்கள் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தால்தான் பயம் உண்டாகும். இந்தக் காதலில் உனக்கு எந்த பங்கும் இல்லை என்றால் கவலைப்படாதே

காதலிக்கிறேன் எப்பொழுது பார்த்தாலும் எனக்கு எனது காதலியின் ஞாபகமே வருகின்றது, படிக்க முடியவில்லை. அவளைக் காணாவிட்டால் தலையே பித்துபிடித்ததுபோல இருக்கின்றது.

நன்றாகப் புரிந்துகொள், நீ காதலிக்கவில்லை கன்னி என்னும கண்ணியில் மாட்டிக்கொண்டாய் என்பதை உனது வார்த்தைகளே வெளிப்படுத்துகின்றன. உன்னை நீயே விடுவித்துக்கொள் தண்ணீரின் கீழே ஆழமாய் மூழ்கிவிட்டு திரும்பி சுவாசிக்கக் கூட மேலே வர முடியாத நிலையைப் போல இருக்கிறது உனது நிலை. நீ இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள். அதற்காகச் செயல்படத் தொடங்கு. உனது வாழ்க்கையின் இலட்சியம் உனது கண்களுக்கு முன் வரட்டும். அவளைச் சிறியதாக்கவேண்டும் என்றால், இறைவனை உனது வாழ்க்கையில் பெரியவராக மாற்றிக்கொள். இறைவனின் அன்பை நீ உணர்ந்துகொண்டால் அது எல்லாவற்றிற்கும் மருந்து

காதலிக்கும் நாங்கள் உடலுறவு கொள்ளவில்லை, தொட்டுப் பழகுகிறோம், அவ்வப்போது முத்தங்களைப் பறிமாறிக்கொள்கின்றோம், இது தவறா?

உனது கேள்விக்கு ஒரே வார்த்தையில் தவறு என்று பதில் கொடுத்துவிடலாம். கண்பட்டு காதல் மலர்வதுண்டு, கைபட்டு கற்பு அழிந்துபோவதுண்டு. அழிவை ஏன் ஆரம்பித்துவைக்கவேண்டும். நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருப்பது தவறுதான்,  எப்பொழுதுவேண்டுமென்றாலும் தீ பற்றிக்கொள்ளும் ஆபத்து உண்டு தூரமாயிருங்கள், கைகூடி வந்தால் திருமணத்திற்குப் பின்னர் கைகோர்த்துப் போகலாமே

காதல் தோற்றுப் போனதால் தற்கொலை செய்யும் உணர்வு எப்பொழுதும் எனது மனதில் உண்டாகின்றது என்ன செய்வது?

காதலையெ நீ இன்னும் நினைத்துக்கொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்து இது. காதலின் தோல்வியைக் குறித்து எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடு. நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கொடுக்கும் நண்பர்களுடன் உன்னை இணைத்தக்கொள். அவள் மட்டும்தான் உலகில் பெண் அல்ல, இன்னும் கோடிகள் உண்டு, கோழைத்தனமான முடிவு வேண்டாம். நீ இன்னும் வாழவேண்டிய வசந்தமான வாழ்க்கை ஏராளம் உண்டு, இந்த ஒன்றைக் காரணம் காட்டி அவை அனைத்தையும் அழித்துவிடாதே. இடறிய கல்லுக்காக ஏன் காலை வெட்டிக்கொள்ளவேண்டும். தற்கொலை உணர்வு மேலோங்கியே நின்றால், தேவ ஊழியர்களிடம் சென்று ஜெபித்து ஆலோசனை பெற்றுக்கொள். எது எப்படியானாலும், நீ உனது மனநிலையை மாற்றி இறைவனண்டை சேர்ந்தால் அத்தனையம் மாறிவிடும்,  கவலைப்படாதே

நான் காதலித்த பெண்ணை வேறொருவன் திருமணம் செய்துவிட்டான், அதனால் அவனை அழித்துவிடவேண்டும் அல்லது அந்த குடும்பத்தை இன்பமாக வாழவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் உண்டாகிறது என்ன செய்வது?

முடிந்துபோனவைகளை முடிச்சு போட்டு தொடர்வது சரியானதல்ல. நடந்தது நடந்ததுதான் நீ மறக்கக் கற்றுக்கொள். அவள் காதலியாக இன்னும் உனது நினைவில் இருந்தால், இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். அவர்களை வாழவிடு, நீ வேறொரு வாழ்க்கையைத் தேடு. அவள் உனக்கு ஏதாவது ஞாபகப் பரிசுகளை, வாழ்த்து அட்டைகளை அனுப்பியிருந்தால் அவைகளை இன்னமும் பத்தரப்படுத்தி வைத்திராமல் அவைகளை வீசிவிடுவது நல்லது

நான் காதலிக்கின்ற வாலிபனோடு ஒருமுறை உடலுறவு கொண்டேன், அதற்குப் பின்னர் அவன் என்னை நேசிக்காததைப் போலவே உணருகின்றேன், இது எனது மனதின் பிரம்மையா, பயமாயிருக்கிறது?

கன்னியாக இருந்த நீ காலியாகிவிட்டாய் என்பதை முதலில் உனக்கு நினைப்பூட்ட விரும்புகின்றேன். கற்பு காலியாகிவிட்டதால் உனது மனதில் எழும் உணர்வுகளின் ஒரு பரிமாணம் தான் இந்த நிலை. மேலும், இனிமேல் என்னை விட்டுவிடுவானோ, வேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளுவானோ என்ற பயம் உனது நெஞ்சில் நிறைந்திருந்தாலும் இந்த நிலை உருவாகும். உன்னைச் சுற்றி வந்தவனை நீ இனி அவனைச் சுற்றிவரும் நிலைக்கு உன்னைத் தள்ளிவிட்டாய். உடலைக் கொடுத்துவிட்டு புலம்புவதைக் காட்டிலும், ஞானமாய் விலகியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதல்லவா. பூவில் தேன் அருந்திவிட்டு தேனீ பறந்து செல்வதுமுண்டு, மீண்டும் தேடிவருவதுமுண்டு. தேனை இழந்த மலர் நீ தேனீயைத் தேடிச் செல்வது இயலுமா? மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு உன்னை அவன் அழைத்தால் அதற்கு விலகி இருந்து அவனது பாசத்தைத் தக்கவைத்துக்கொள்ப்பார்,  அதற்கு நீ விலகுவதால் அவன் பறந்து சென்றால் மறந்துவிடு, கற்பை இழந்துவிட்டால் நீ கழித்துப்போடப்பட்டுவிடுவாய். எச்சில் இலையாய் நீ எறியப்படுவதைக் காட்டிலும், சரீரமாகிய உனது இலையில் கற்பாகிய சோற்ளை திருமணம் வரை காதலனுக்கு பரிமாறாமல் இருப்பது நல்லது

நான் காதலித்த வாலிபன் என்னை விட்டுவிட்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன் இது சரியா

உன்னைக் காதலித்த வாலிபன் அந்த முடிவை எடுக்காதபோது, நீ மட்டும் ஏன் இந்த முடிவை எடுக்கவேண்டும்? வேறொருவனுடன் வாழுவதை என்னால் நினைத்தக்கூடப் பார்க்கமுடியவில்லை என்று சொல்லாதே, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கவும் தெரியவேண்டும்.